🌼Question no: 171🌼
Oru kanavaan, manaivi idam sandai potu kondu irukumothu, avar kovathil “talak, talak, talak” indru 3 tadavai voray neratil solli vittaal, athu 3 talak aha ahividuma? Illai athu 1st talak taan ahuma?
Talak solvathu patri vilakam sollunggal…
🌼கேள்வி எண்:171🌼
ஒரு கணவன் மனைவியிடம் சண்டை போட்டு கொண்டு இருக்கும்போது அவர் கோபத்தில் “தலாக், தலாக், தலாக்”என்று மூன்று முறை ஒரே நேரத்தில் சொல்லி விட்டால் அது மூன்று தலாக்காக ஆகிவிடுமா?
இல்லை அது முதல் தலாக்தான் ஆகுமா?
தலாக் சொல்வதின் சட்டம் என்ன?
🍂பதில்🍂
கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்சினைகள் வருவது சாதாரணமானதுதான். அது உடனுக்குடன் சரியாகிவிடும்.
அதுபோலல்லாமல் பிரச்சனைகள் தீர்க்க முடியாத முற்றிய நிலைமைக்கு போய் அது தொடந்து கொண்டேயிருந்து வாழ முடியாத சூழ்நிலை வரும்போது இஸ்லாம் நமக்கு காட்டிதந்த வழிதான் “தலாக்” எனும் விவாகரத்து.
இந்த தலாக்கினால் கணவன், மனைவி மட்டுமல்லாமல் குழந்தைகள், பெற்றோர்கள் என மொத்த குடும்பமே பாதிப்புள்ளாகுவதால்,
இஸ்லாம் நான்கு படித்தரங்களை வைத்துள்ளது.
தலாக் கூறுவதற்கு முன்
கணவன் மனைவிக்கு அறிவுரை கூறியோ, அல்லது கணவன் மீது தவறிருக்குமாயின் மனைவி கணவனுக்கு அறிவுரை கூறியோ அவர்களுக்குள்ளாகவே பிரச்சனைகளை தீர்க்க முயல வேண்டும்.
அடுத்து கணவன் மனைவியை இலேசான தண்டனைகள் கொடுத்து பிரச்சனைகளை தீர்க்க முயலலாம்.
கணவன் மனைவியை படுக்கையிலிருந்து தள்ளி வைக்கலாம்.
இது எதுவுமே சரிவராத பட்சத்தில் இருவீட்டாரிடமிருந்து நடுவர்கள் வந்து பிரச்சனைகளை பேசி தீர்த்துவைக்க வேண்டும்.
மேற்கூறிய நான்கு விஷயங்களை கையாண்டும் வாழமுடியாது என யாரேனும் ஒருவர் முடிவெடுத்தாலும் தலாக் கூறிவிட இஸ்லாம் அனுமதித்துள்ளது.
_இரண்டு சாட்சிகளை வைத்து “தலாக்” உன்னோடு வாழ விரும்பவில்லை, என்று கூறினால் முதல் தலாக் நிறைவடைகிறது_
_அதற்கு பின் மூன்று மாதவிடாய் காலம் கழிந்து மீண்டும் மேற்கூறியது போல் இரண்டாம் தலாக் கூறவேண்டும்._
முதல் தலாக் அல்லது இரண்டாம் தலாக் கூறுனாலும் இருவரும் மீண்டும் இணைந்து வாழ முடிவெடுத்தால் தாராளமாக மீண்டும் இணைந்து வாழலாம்.
கணவன், மனைவி பிரச்சனைகள் பிரிந்திருக்கும் சமயத்தில் ஒன்றுமில்லாதது போல் இருக்கும் என்பதாலும், இதன் பாதிப்பை ஒருவருக்கொருவர் பிரிந்திருக்கும்போது அறியக்கூடும் என்பதாலும் இஸ்லாம் இப்படி அழகான ஒரு சலுகையை அளித்துள்ளது.
_இரண்டு முறை தலாக் கூறிய பின்னரும் வாழ விருப்பமில்லை எனில் மூன்றாம் தலாக் கூறி நிரந்தரமாக பிரிந்து விட வேண்டும்._
இதற்கு பிறகு சேர்ந்து வாழ முடியாது.
ஒருவேளை மீண்டும் இணைந்து வாழ விரும்பினால் அந்த பெண் இன்னொரு திருமணம் செய்து, அந்த கணவனை விவாகரத்து செய்ய வேண்டும்.
விவாகரத்து ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் இதே சட்டம்தான் ஆனால் அவர்களுக்கு மஹர் தொகை ஆண்கள் அளிப்பதால் அதை இஸ்லாம் சட்ட அடிப்படையில் திருப்பி செலுத்த வேண்டும்.
இதுதான் தலாக்கின் சட்டம்.
அதை விடுத்து *ஒரே தடவையில் தலாக்,தலாக், தலாக், என மூன்று முறை ஏன்? முன்னூறு முறை கூறினாலும் அது முதல் தலாக் தான்*
*அதேபோல் கோபத்தில் போதிய சாட்சிகள் இல்லாமல் தலாக் கூறினால் அது தலாக் ஆகாது*
*போதிய சாட்சிகளுடன் வாழவிரும்பவில்லை என்று கூறினால்தான் அது “தலாக்”ஆகும்*
📚📖 ஆதாரங்கள்:
📙நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் 2932, 2933, 2934
📙
الطَّلَاقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ ۗ وَلَا يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُوا مِمَّا آتَيْتُمُوهُنَّ شَيْئًا إِلَّا أَن يَخَافَا أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِ ۗ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ ﴿2:229﴾
2:229. (இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் கூறலாம் – பின் (தவணைக்குள் முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம்; அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்;; அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர, நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது – இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை; இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும்; ஆகையால் அவற்றை மீறாதீர்கள்; எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள்.
📙நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ் (ரலி) என்பவரின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறை கூறமாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறுசெய்வதை நான் வெறுக்கிறேன்” என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்றார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி சரி என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் “தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு” என்றார்கள்.
நூல் : புகாரி 5273, 5275, 5277
**********************************
🌸Question no: 172🌸
Kuliyalaraiyil siruneer kalikkalama?
🌸கேள்வி எண்:172🌸
குளியலறையில் சிறுநீர் கழிக்கலாமா?
💦பதில்💦
சிறுநீர் கழிக்கும் இடத்தில் குளிக்கவோ, குளிக்கும் இடத்தில் சிறுநீர் கழிக்கவோ இஸ்லாம் நமக்கு தடை செய்கிறது.
இப்போதுள்ள வீடுகளில் குளியலறையும், சிறுநீர் கழிக்கும் தொட்டியும் இணைத்தே கட்டப்படுகிறது.
அதற்குரிய இடத்தில் சிறுநீர் கழித்துவிட்டு, குளிக்கும் பகுதியில் குளிப்பது குற்றமாகாது. ஏனெனில் அது இணைத்து கட்டப் பட்டிருந்தாலும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல்தான் இருக்கும். அசுத்தம் கலக்காது.
ஆனால் அப்படி இல்லாத அமைப்பில் இருந்தால் குளிக்குமறையில் சிறுநீர் கழிக்கக்கூடாது.
ஏதேனும் நிர்பந்தமான நிலை இருக்குமானால் விதிவிலக்கு உள்ளது. இப்படி நிர்பந்தம் ஏற்படும்போது நன்றாக சுத்தம் செய்துவிட்டு குளிக்கலாம்
ஏனெனில் சுத்தம் என்பது ஈமானில் ஒரு பகுதி.
பொதுவான அடிப்படையில் *குளியலறையில் சிறுநீர் கழிப்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.*
📚📖ஆதாரங்கள்:
📔அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தான் குளிக்கும் இடத்தில் சிறுநீர் கழிக்கவும் பிறகு அதில் குளிக்கவும் வேண்டாம். பிறகு அதில் உலூ செய்யவும் வேண்டாம். ஏனெனில் அதில் தான் பெருமளவு வஸ்வாஸ் (மனக்குழப்பம்) உள்ளது என்று அப்துல்லாஹ் பின் முகப்பல் (ரளி) அறிவிக்கின்றார்கள்.
(குறிப்பு: இந்த ஹதீஸை திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோரும் தமது நூல்களில் பதிவு செய்துள்ளனர்.)
📔அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் அபூஹுரைரா (ரளி) அவர்கள் தோழமை கொண்டது தோழமை கொண்ட நபித்தோழர் ஒருவரை நான் சந்தித்தேன். எங்களில் ஒருவர் தினந்தோறும் தலைவாரிக் கொள்வதையும் தான் குளிக்குமிடத்தில் சிறுநீர் கழிப்பதையும் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டனர் என்று அவர் அறிவித்தார் என ஹுமைத் அல் ஹிம்யரி என்பார் அறிவிக்கிறார்.
(குறிப்பு: இந்த ஹதீஸை நஸயீ அவர்களும் தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.)
📔4842. உக்பா இப்னு ஸுஹ்பான்(ரஹ்) கூறினார்
குளியலறையில் சிறுநீர் கழிப்பது தொடர்பாக அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) கூற கேட்டேன். (நபி(ஸல்) அவர்கள் அதற்குத் தடைவிதித்ததாக அன்னார் தெரிவித்தார்கள்.)
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 65. திருக்குர்ஆன் விளக்கவுரை
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
🐐Question no:173🐐
Kurbani, akkeka, ulhiya ithai patri sariyana wilakkam thewai and intha wahai kariyil ewwaru pangu kuduknum athil naam ewlawu edukalam? Wilakkam thewai
🐐கேள்வி எண்:173🐐
குர்பானி,அகீகா,உல்ஹியா இதைப்பற்றி விளக்கம் தேவை.
இந்த வகை இறைச்சிகளின் பங்கீடு பற்றிய விளக்கம் தேவை.
🐄பதில்🐄
*குர்பானி பற்றிய முழுமையான விளக்கம்*
இப்ராஹீம்(அலை)நபி அவர்களின் மாபெரும் தியாகத்திலிருந்து படிப்பினைகளை பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வருடமும் துல்ஹஜ் மாதத்தில் ஆடு, மாடு ஒட்டகங்களை அறுத்துப் பலியிடுமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.
துல்ஹஜ் மாத்தின் முதல் பத்து நாட்களில் செய்யும் நற்காரியங்களுக்கு தனிச்சிறப்பு இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்காக நாம் தொழுகை நோன்பு தர்மம் போன்ற வணக்கங்களை அதிக ஆர்வத்துடன் செய்து வருகிறோம். அல்லாஹ்விடத்தில் நம்மை நெருக்கமாக்கி வைக்கும் இது போன்ற வணக்கங்களில் குர்பானியும் ஒன்றாகும். இதை நபி (ஸல்) அவர்கள் வழிபாடு என்று குறிப்பிடுகிறார்கள்.
பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின்னரே பலிபிராணியை அறுக்க வேண்டும்.
குர்பானி கொடுப்பது வலியுறுத்திச் சொல்லப்பட்ட சுன்னத்தாகும். வசதியுள்ளவர்கள் அவசியம் இந்த வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும்.
தொழுகைக்கு முன் குர்பானி கொடுத்திருந்தாலும் தவறாகக் கொடுத்ததினால் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியிருப்பதால் வசதியுள்ளவர்கள் கண்டிப்பாகக் குர்பானி கொடுக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.
நபி (ஸல்) அவர்கள் பயனத்திலும் ஊரில் இருக்கும் போதும் குர்பானி கொடுத்துள்ளார்கள். இந்த நடைமுறை அதன் அவசியத்தை உணர்த்துகிறது.
கடன் வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டும் என்று பலர் நினைக்கின்றார்கள். இதை நிறைவேற்றுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். கடன் வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் வருவதால் இவ்வாறு செய்கிறார்கள். உண்மையில் இது தொடர்பாக வரும் செய்திகள் பலவீனமானதாகும்.
கடனாளியாக இருந்தால் குர்பானி கொடுப்பது அவர் மீது கட்டாயம் ஆகாது. அவர் முதலில் கடனையே நிறைவேற்ற வேண்டும். ஏனென்றால் இஸ்லாத்தின் தூண்களாக விளங்கும் ஜகாத் ஹஜ் போன்ற கடமைகள் கூட நம் சக்திக்கு உட்பட்டால் தான் கடமையாகும். மிகவும் வலியுறுத்திச் சொல்லப்பட்ட இந்தக் கடமைகளை கடன் வாங்கி நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்கம் பணிக்கவில்லை.
நபி (ஸல்) அவர்கள் தடுத்த காரியங்களை முழுமையாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் கட்டளையிட்டால் அதை நம்மால் முடிந்த அளவு நிறைவேற்ற வேண்டுமே தவிர சிரமப்பட்டு நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு மார்க்கம் உபதேசிக்கிறது.
குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ்ஜு மாதம் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக் கூடாது.
குடும்பத்தை நடத்திச் செல்பவர் தன் குடும்பத்தின் சார்பாக குர்பானி கொடுப்பார்.
ஒட்டகம்,ஆடு, மாடு இம்மூன்றும் குர்பானி கொடுக்கத் தகுதியான பிராணிகள். இதைத் தவிர வேறு எதையும் குர்பானி கொடுக்கக் கூடாது.
குர்பானிப் பிராணிகள் நல்ல திடகாத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக் குறையும் இல்லாததாக இருக்க வேண்டும்.
சில ஊர்களில் சேவல், கோழி போன்றவற்றை குர்பானி கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வது கூடாது. இதற்கு ஹதீஸ்களில் எந்த ஆதாரமும் கிடையாது.
குட்டியை ஈன்று பால் கொடுத்துக் கொண்டிருக்கும் பிராணியை அறுக்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஏனென்றால் தாயை அறுத்து விட்டால் குட்டி பாசத்திற்கும் பாலிற்கும் ஏங்கக்கூடிய நிலை ஏற்படும். குர்பானி கொடுப்பவர்கள் இதை கவனத்தில் கொண்டு குட்டிபோட்டு பால்தரும் பிராணிகளை அறுப்பதை தவிர்க்க வேண்டும்.
ஒட்டகம், மாடு இவற்றில் ஏழு நபர்கள் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். அதாவது ஏழு குடும்பங்கள் சேர்ந்து ஒரு ஒட்டகம் அல்லது மாடு வாங்கி ஏழு குடும்பங்கள் சார்பாகக் குர்பானி கொடுக்கலாம்.
கால்நடைகளை முறையாக ஒரு பக்கமாகப் படுக்கவைத்து அவை எழாமல் இருப்பதற்காக அவற்றின் கழுத்தில் காலை வைத்து அழுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பலிப்பிராணியை அறுக்கும் போது அது துள்ளி பூரணமாக அறுப்பதைத் தடுத்துவிடும். இதற்காக நபி (ஸல்) அவர்கள் இம்முறையைக் கடைப்பிடித்துள்ளார்கள்.
ஒட்டகத்தைப் பொறுத்தவரை நிற்க வைத்து அதன் ஒரு காலை கயிற்றால் கட்டி வைத்துக் கொண்டு அறுக்க வேண்டும். ஒட்டகம் என்பது ஆட்டைப் போன்றதல்ல. ஆட்டை அறுப்பதைப் போன்று படுக்க வைத்து அதை அறுக்க இயலாது. ஆகையால் ஒட்டகத்தில் இம்முறையைக் கடைபிடிக்க வேண்டும்.
குர்பானி கொடுத்த பிராணியின் மாமிசத்தை மூன்று பங்கு வைத்து ஒரு பங்கு தனக்காகவும், மற்றொன்று சொந்தக்காரர்களுக்கும், மற்றொன்று ஏழைகளுக்காகவும் கொடுக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸும் இல்லை. தனது தேவைக்குப் போக சொந்தம், ஏழை, யாசிப்பவர்கள் இப்படி யாருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நிர்ணயம் எதுவுமில்லை.
அல்லாஹ் இத்தனை சதவிகிதம் கொடுக்க வேண்டுமென கட்டளையிடவில்லை. பொதுவாக தர்மம் செய்யுங்கள் என்றே கூறுவதால் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நபி (ஸல்) அவர்கள் இறைச்சி முழுவதையும் தர்மம் செய்துள்ளார்கள்.
மாமிசத்தில் நமக்குத் தேவையான அளவை எடுத்துக் கொள்ள அனுமதி உள்ளது. நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தின் போது மதீனாவிற்கு வரும் வரை அளவில்லாமல் குர்பானிப் பிராணியின் இறைச்சியை உண்டுள்ளார்கள்.
இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை. இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டப்படும் ஹதீஸ் பலவீனமானதாக உள்ளது.
அல்லாஹ்விற்காகக் குர்பானி கொடுப்பதைப் போன்றே அவ்லியாக்களின் பெயர்களைக் கூறி அவர்களுக்காகச் சிலர் குர்பானி கொடுக்கிறார்கள். இது அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் மாபாதகச் செயலாகும். குர்பானி என்பது தொழுகை நோன்பு ஹஜ் ஆகிய வணக்கங்களைப் போன்று ஒரு வணக்கமாகும். நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுப்பதை வணக்கம் என்று சொல்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்தபடி குர்பானி கொடுத்து நமது இறையச்சத்தை அதிகப்படுத்துவோமாக! இன்ஷா அல்லாஹ்
📚📖 ஆதாரங்கள்:
📕அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!
அல்குர்ஆன் (22 : 37)
📕அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பெருநாளன்று நிகழ்த்திய உரையில்) யார் நமது தொழுகையைத் தொழுது நமது தொழும் திசையை (கிப்லாவை) முன்னோக்கி நமது குர்பானி வழிபாட்டைச் செய்கிறாரோ அவர் தொழுவதற்கு முன் குர்பானிப் பிராணியை அறுக்க வேண்டாம். என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : பராஃ பின் ஆசிப் (ரலி)
நூல் : புகாரி (955)
📕குர்பானி கொடுப்பது முஸ்லிம்களின் வழிமுறையாக அல்லாஹ்வால் ஆக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றுபவர் முஸ்லிம்களின் வழியில் நடந்தவர் ஆவார். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கின்றாரோ அவர் தம் (சொந்த தேவைக்காகவே) அறுத்தவர் ஆவார். யார் தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறாரோ அவரது (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகிவிடும். மேலும் அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றியவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி (5546)
📕யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறாரோ அவர் திரும்பவும் அறுக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (954)
📕அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய குர்பானிப் பிராணியை அறுத்துவிட்டு சவ்பானே இதன் இறைச்சியைப் பக்குவப்படுத்துவீராக என்று கூறினார்கள். அவர்கள் மதீனாவிற்கு வரும் வரை அதிலிருந்து அவர்களுக்கு நான் உண்ணக் கொடுத்துக் கொண்டே இருந்தேன்.
அறிவிப்பவர் : சவ்பான் (ரலி)
நூல் : முஸ்லிம் (3649)
📕நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கிறாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.
அறவிப்பவர் பராஃ (ரலி)
நூல் புகாரி (951)
📕நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்த்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (7288)
📕எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.
(அல்குர்ஆன் 2 : 286)
📕கடனைத் தவிர அனைத்து பாவமும் அல்லாஹ்வின் பாதையில் மரணித்தவருக்காக மன்னிக்கப்படுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் (3498)
📕நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)
நூற்கள் : முஸ்லிம் (3655), நஸயீ (4285)
📕தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அல்பரா பின் ஆசிப் (ரலி)
நூற்கள் : திர்மிதீ(1417), அபூதாவூத்(4293), நஸயீ(4294) , இப்னுமாஜா (3135), அஹ்மத் (17777)
📕நபி (ஸல்) அவர்கள் உட்பகுதியில் பாதி கொம்பு உடைந்த ஆடு குர்பானி கொடுக்கப்படுவதை தடுத்தார்கள்.
நூல் : நஸயீ (4301)
அறிவிப்பாளர் : அலீ (ரலி)
📕பலியிடக் கூடிய பிராணிகளில்) எட்டு வகைகள் உள்ளன. செம்மறியாட்டில் (ஆண் பெண் என) இரண்டு, வெள்ளாட்டில் இரண்டு உள்ளன. (இவற்றில்) ஆண் பிராணிகளையா (இறைவன்) தடுத்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவற்றையா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அறிவுடன் எனக்கு விளக்குங்கள்!” என (முஹம்மதே!) கேட்பீராக! ஒட்டகத்தில் இரண்டு, மாட்டில் இரண்டு உள்ளன. இவற்றில் ஆண் பிராணிகளையா தடை செய்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவைகளையா?” என்று (முஹம்மதே!) கேட்பீராக!
அல்குர்ஆன் (6 : 143)
📕நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஒரு ஒட்டகத்தில் 10 பேர் வீதமும் நாங்கள் கூட்டுசேர்ந்தோம்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : திர்மிதி (1421), நஸயீ (4316),இப்னு மாஜா (3122)
📕எல்லாப் பொருட்களின் மீதும் நல்ல முறையில் நடந்து கொள்வதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். நீங்கள் (கிஸாஸ் பழிக்குப் பழி வாங்கும் போது) கொலை செய்தால் அழகிய முறையில் கொலை செய்யுங்கள். நீங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். உங்கள் கத்தியை நீங்கள் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள்! (விரைவாக) அறுப்பதன் மூலம் அதற்கு நிம்மதியைக் கொடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஷிதாத் இப்னு அவ்ஸ்(ரலி)
நூற்கள் : முஸ்லிம் (3615), திர்மிதி(1329) நஸயீ(4329), அபூதாவூத் (2432) இப்னுமாஜா (3161), அஹ்மது(16490)
📕நபி(ஸல்) அவர்கள் கருப்பும், வெள்ளையும் கலந்த இரண்டு கொம்புள்ள ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள். அதைத் தன் கையால் அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ்(ரலி)
நூற்கள் : புகாரி(5565), முஸ்லிம் (3635)
📕தஷ்ரீகுடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜுபைர் இப்னு முத்இம்(ரலி)
நூல் : தாரகுத்னீ (பாகம் : 4) (பக்கம் : 284)
📕அவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்! (வறுமையிலும் கையேந்தாமல், இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்.
அல்குர்ஆன் (22 : 36)
📕நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது அவர்களுடைய 100 ஒட்டகத்தில்) 63 ஒட்டகைகளை தன் கரத்தால் குர்பானி கொடுத்தார்கள். மீதத்தை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து (அறுக்கும் படி கூறினார்கள்). அலீ (ரலி) அவர்கள் மீதத்தை அறுத்தார்கள். அவற்றில் ஒவ்வொரு ஒட்டகத்திலும் சில துண்டுகளை (எடுத்து சமைக்கும் படி) கட்டளையிட்டார்கள். அவை ஒரு சட்டியில் வைத்து சமைக்கப்பட்டது. பின்பு அவர்கள் இருவரும் அதன் இறைச்சியை உண்டு அதன் குழம்பை பருகினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம் (2137)
📕குர்பானி இறைச்சியிலிருந்து) உண்ணுங்கள். சேமித்துக் கொள்ளுங்கள். தர்மம் செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் வாகித் (ரலி)
நூல் : முஸ்லிம் (3643)
📕ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கும் பொறுப்பை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அதன் மாமிசத்தையும், தோலையும் அதன் மீது கிடந்த(கயிறு, சேனம் போன்ற)வைகளையும் தர்மமாக வழங்குமாறும் உரிப்பவருக்குக் கூலியாக அதில் எதனையும் வழங்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அதற்கான கூலியை நாங்கள் தனியாகக் கொடுப்போம்.
அறிவிப்பவர் : அலீ(ரலி)
நூற்கள் : புகாரி (1716), முஸ்லிம் (2320)
📕ஒரு அன்சாரித் தோழர் நபி (ஸல்) அவர்களுக்காக ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பால்தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என நான் உம்மை எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
முஸ்லிம் : (3799)
📕அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடைய குர்பானிப் பிராணியை அறுத்துவிட்டு சவ்பானே இதன் இறைச்சியை பக்குவப்படுத்துவீராக என்று கூறினார்கள். அவர்கள் மதீனாவிற்கு வரும் வரை அதிலிருந்து அவர்களுக்கு நான் உண்ணக்கொடுத்துக் கொண்டே இருந்தேன்.
அறிவிப்பவர் : சவ்பான் (ரலி)
நூல் : முஸ்லிம் (3649)
“”””””‘”””””””””””””””””””””””””””””””””””””””””””””””
*உல்ஹியா*
உல்கியா என்றால் சிலர் தொழுகைக்கு முன் அறுக்கும் பலிப்பிராணி என்றும் தொழுகைக்கு பின் அறுக்கும் பலிப்பிராணி குர்பானி என்றும் கூறிவருகின்றனர்.
இது பலவீனமான செய்தியாகும்.
ஏனெனில், தொழுகைக்கு முன் பலிப்பிராணிகளை அறுப்பதை நபி(ஸல்)அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
*உல்ஹியா என்பதும் குர்பானி என்பதும் ஒன்றே ஆகும்*
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
👬Question no: 174👬
Muhammad nabi(sal) avargal “oru nanbanai evvaaru thervu seyvadhu, nanbanodu evvaaru bazhaguvadhu” endru solli irukkiraargal. Hadees adhaarathodu badhil thara vendum.
👬கேள்வி எண்:174👬
முஹம்மது நபி (ஸல்.) அவர்கள் “ஒரு நண்பனை எவ்வாறு தெரிவு செய்வது, நண்பனோடு எவ்வாறு பழகுவது.!”இது பற்றி என்ன சொல்லியிருக்கார்.ஹதீஸ் ஆதாரத்தோடு பதில் வேண்டும்.!
👭பதில்👭
இவ்வுலகில் வாழும் மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு என்று நண்பர்களையும் நட்பு வட்டாரத்தையும் கொண்டிருப்பார்கள். நண்பர்கள் இல்லாத மக்கள் இல்லை என்ற சொல்லும் அளவிற்கு எல்லோருக்கும் அவரவர்கள் தகுதிக்கேற்ப நட்பு வட்டாரங்கள் அமைந்து இருக்கும்.
ஒருத்தருடைய கண்ணியத்தையும் நடத்தையையும் அவரின் நண்பர்களைக் கொண்டே கணித்து விடும் அளவுக்கு நண்பர்கள் கூட்டம்.
நண்பர்களில் சிலர் தன் நண்பனின் துயர் துடைப்பவராகவும்,கஷ்டமான காலங்களில் கை கொடுப்பவராகவும் இருப்பதையும் காணலாம். அதே வேளை சிலர், தங்களுடைய நண்பர்களின் தவறான செயல்களினால் தங்களின் பொன்னான நேரத்தையும் வாழ்வையும் சீரழித்துக் கொள்வதையும் காண முடிகிறது.
இஸ்லாமும் நண்பர்கள் வைத்துக் கொள்வதை தடை செய்யாமல் ஊக்கப்படுத்துகிறது. நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ள ஆர்வமூட்டுகிறது. ஆனால் அந்த நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்றும் வரைமுறையை ஏற்படுத்தித் தந்துள்ளது.அதன் அடிப்படையில் நமது நண்பர்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.
அழகிய நட்பு நம்மை படைத்த இறைவனின் பொருத்தத்தைப் பெற்றுத் தரக்கூடியதாக உள்ளதால் நாம் தேர்வு செய்யும் நண்பன் நாம் பின்பற்றும் இஸ்லாமியக் கொள்கை பிடிப்புள்ளவனா? என்பதை பார்க்க வேண்டும்.எல்லோரையும் நண்பர்களாக ஆக்கிக் கொள்வதை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிப்பதில்லை.
அதேபோல் நண்பனை தேர்வு செய்வதற்கு முன்னால் நம்முடைய குணத்திற்கும் பழக்க வழக்கத்திற்கும் ஒத்துப் போகுமா? என்பதை தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.
தீயவர்களுடைய நட்பு இவ்வுலக வாழ்க்கையை மட்டுமின்றி மறுமை வாழ்வையும் நாசப்படுத்தி விடும் என்பதை உணர வேண்டும். அதே போல் நல்லவர்கள், நேர்மையானவர்கள் உடைய நட்பு இவ்வுலக வாழ்வை மட்டுமின்றி மறுமை வாழ்வையும் சந்தோசமாக அமைத்து விடும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நல்லவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுமாறு கூறினார்கள்.
முஸ்லிமாக இருக்கக் கூடியவர் ஒருத்தரை நண்பராக ஆக்கிக் கொள்ள வேண்டுமானால் அந்த தேர்வு அல்லாஹ்விற்காக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. இவ்வுலகில் கிடைக்கும் சொற்ப லாபங்களுக்காக நண்பர்களை தேர்வு செய்வதை விட்டும் நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
நண்பர்கள் என்ற பெயரில் இன்றைய தினங்களில் நம் நண்பர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் நம்மை அல்லாஹ்விற்காக நேசிக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்களா? என்பதை கவனிக்க வேண்டும். அல்லாஹ்விற்காக நேசித்தால், நண்பர்களை ஆக்கிக் கொண்டால் அந்த நண்பர்கள் மூலமாக அல்லாஹ்வின் திருப்பொருத்தமும், நேசமும் கிடைக்கும் என்பதை அழகாக படம் பிடித்துக் காண்பிக்கிறது.
மேலும் நல்ல நண்பர்கள் கிடைத்து விட்டால், யார் நல்லவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொண்டார்களோ அவர்கள் மறுமை நாளில் கவலைப்பட மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
நண்பர்களில் பெரும்பாலோர் நம்மிடம் இருக்கும் பொருளாதாரத்திற்காகவும், செல்வத்திற்காகவும், நம்முடைய அந்தஸ்திற்காகவும், பதவி பகட்டுக்காகவும் இருப்பதை காணலாம். செல்வம் இருக்கும் போது நட்பு கொண்டாடும் நண்பர்கள் வட்டாரம், கஷ்டங்கள் வரும் போது இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய் விடுவதை சர்வ சாதாரணமாக காணலாம்.
நல்ல நண்பர்களையும் உலக ஆதாயத்திற்காக பழகும் நண்பர்களையும் அறிந்து கொள்வதற்கு நாம் வாழ்வில் சந்திக்கும் கஷ்டங்களும் சோதனைகளும் அளவுகோலாக அமைந்து விடுகிறது. புயல் காற்று வரும்போது தான் உறுதியான கட்டடம் எது? உறுதியற்ற கட்டடம் எது? என்பது விளங்குவதுபோல், சோதனைகள் நண்பர்களை அறிந்து கொள்ள உதவுகிறது.
உண்மையான நட்பு என்பது, நம் உடலில் இருந்து ஆடை விலகும்போது, எப்படி கை விரைந்துச் சென்று ஆடையை பிடித்து மானத்தை காப்பாற்றுகிறதோ, அதேபோல் நண்பன் கஷ்டப்படும்போது அவனின் கஷ்டத்தை தீர்த்து வைப்பவனே உண்மையான நண்பன் ஆவான்.
இவ்வுலகில் ஒரு சிலரை நல்ல நண்பர்களாக உற்ற தோழர்களாக எண்ணியிருப்போம். ஆனால் அந்த உற்ற நண்பனே நம்மை ஏமாற்றியிருப்பான். நம்மை வெளிநாடு அனுப்புவதாகக் கூறி ஏமாற்றுவான். நம்பிக் கொடுத்த பொருளில் மோசடி செய்வான். சில நண்பர்கள் இருக்கின்றார்கள் அவர்கள், தங்களின் உயிர் நண்பன் என்று சொல்லக் கூடியவனின் மனைவியையே தடடிச் சென்ற நிகழ்வுகளும் நடந்துள்ளதை அறிய முடிகிறது. இப்படிப்பட்ட நட்பையும் இஸ்லாம் அங்கிகரிக்கவில்லை என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இப்போதுள்ள சூழலில் பள்ளி,கல்லூரிகள்,அலுவலகங்கள், அண்டைவீட்டார் என மாற்று மதத்தவர்கள் உள்ளதால் அவர்களுடன் நட்பு வைத்து கொள்வது தவறல்ல. ஆனால் அந்த நட்பு அவர்களுடைய கலாச்சாரத்தில் கலந்து கொண்டு விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நபி(ஸல்) அவர்கள் பல மாற்று மதத்தவர்களிடம் நல்ல முறையில் பழகியுள்ளார்கள்.
அவர்களுடன் பழகுவது நம் மார்க்கத்தை எந்த விதத்திலும் பாதிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
நம் மார்க்கத்தை அவர்கள் அறிந்து கொள்ளவும், ஓரிறைக் கொள்கையை எத்தி வைக்கவும் அது ஏதுவாக அமையும்.
மாற்றுமத நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது மிக கவனமாக இருக்க வேண்டும்.
நண்பர்கள் தவறு செய்யும்போது அந்த தவறுகளை திருத்துபவர்களாக நண்பர்கள் இருக்க வேண்டும். அவர்களுக்கு நன்மை நாடுபவர்களாக நண்பர்கள் இருக்க வேண்டும். அவ்வாறு தவறுகளை தடுக்கும்போது சிலர் எடுத்தெறிந்து பேசி விடுவார்கள். அந்த நேரங்களில் அவர்களை கோபித்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். ஆகவே நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவர்கள் இஸ்லாம் காட்டிய முறைப்படியும் அல்லாஹ்வின் நேசத்தைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலும் அமைத்துக் கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ் நற்கிருபை செய்வானாக!
📚📖ஆதாரங்கள்:
📓அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தோழர்களில் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர் அவர்களில் யார் தன்னுடைய தோழரிடத்தில் சிறந்தவராக இருக்கிறாரோ அவராவார் (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) திர்மிதி (1867)
📓உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று(குணத்தால்) ஒத்துப் போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன. (ஆயிஷா(ரலி) புகாரி 3336)
📓 நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உனது ஆடையையோ எரித்து விடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர். (அபூமூசா (ரலி) புகாரி 3336)
📓குற்றவாளியிடம், உங்களை நரகத்தில் சேர்த்தது எது? என்று விசாரிப்பார்கள். நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம் (அல்குர்ஆன்: 74 : 40-45)
📓அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்விற்காக நேசிக்கிறாரோ அல்லாஹ்விற்காக வெறுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்கிறாரோ அல்லாஹ்விற்காக மறுக்கிறாரோ அவர் தான் ஈமானை புரணப்படுத்திக் கொண்டவர் (அபூஉமாமா(ரலி) அபூதாவூத் 4061)
📓
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வேறொரு ஊரில், இருக்கும் தன் சகோதரனை சந்திப்பதற்காக ஒருவர் சென்றார். அவர் செல்லும் வழியில் ஒரு வானவரை அல்லாஹ் அவரிடத்தில் அனுப்பினான். அந்த வானவர் அவரிடத்தில் வந்தபோது நீங்கள் எங்கே செல்ல நினைக்கிறீர்கள்? எனக் கேட்டார். அதற்கு அவர் இந்த ஊரில் உள்ள எனது சகோதரனை சந்திக்கச் செல்கிறேன் என்று கூறினார். உங்களுக்கு சொந்தமான எதையாவது அவர் உங்களுக்கு தர வேண்டியுள்ளதா? என்று கேட்டார். அதற்கு இல்லை. கண்ணியமானவனும் சங்கையானவனுமான அல்லாஹ்விற்காக அவரை நேசிக்கிறேன் என்று கூறினார். அந்த வானவர் நீங்கள் யாருக்காக அவரை நேசித்தீர்களோ அவன் உங்களை நேசிக்கிறான் என்பதை உங்களிடம் (கூற வந்த) அல்லாஹ்வின் தூதராவேன் நான் எனக் கூறினார்.
(அபூஹூரைரா(ரலி) முஸ்லிம் 4656)
📓 அல்லாஹ் கூறுவதாக, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் விஷயத்தில் ஒருவருக் கொருவர் நேசித்துக் கொள்பவர்களுக்கும், என் விஷயத்தில் அமர்பவர்களுக்கும் என் விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு செலவு செய்பவர்களுக்கும் எனது பிரியம் உறுதியாகி விட்டது. (முஆத் (ரலி) அஹ்மத்(21114)
📓அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் எனக்காக நேசம் வைத்துக் கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இந்நாளில் நான் அவர்களுக்கு எனது நிழலைத் தருகிறேன் என்றுக் கூறுவான் (அபூஹூரைரா(ரலி) முஸ்லிம் 4655)
📓அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் நபிமார்களும் அல்ல. இறைவனின் பாதையில் உயிர் நீத்தவர்களும் அல்ல. இவர்களுக்கு அல்லாஹ் விடத்தில் கிடைக்கும் அந்தஸ்தைப் பார்த்து நபிமார்களும் தியாகிகளும் பொறாமைப்படுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். சஹாபாக்கள், அவர்கள் யார்? என எங்களுக்குக் கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் தங்களுக்கிடையே இரத்த உறவிற்காகவோ, கொடுத்து வாங்கிக் கொள்ளும் செல்வங்களுக்காகவோ அல்லாமல் அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டவர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக அவர்களுடைய முகங்கள் ஒளியாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீது இருப்பார்கள். மக்கள் அஞ்சும் போது அவர்கள் அஞ்சமாட்டார்கள். மக்கள் கவலைப்படும் போது அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்று கூறி விட்டு அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்ற வசனத்தை படித்துக் காட்டினார்கள்.
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அபூதாவூத் 3060)
📓அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனக்கு விரும்புவதை தன்னுடைய சகோதரனுக்கு விரும்பாதவரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக ஆக முடியாது.
(அனஸ் (ரலி) புகாரி 13)
📓அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான்.அவனுக்கு அநீதி இழைக்கவும் மாட்டான்,அவனை கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுகிறான்.எவர் ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகிறாரோ அவரின் மறுமை நாளின் துன்பத்தை அல்லாஹ் நீக்குகிறான். எவர் ஒருவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவரின் குறைகளை அல்லாஹ் மறுமை நாளில் மறைக்கிறான். (அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) புகாரி 2442
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••